ஞாயிறு இரவு நடந்த இறுதி முயற்சி..
இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டதாக நம்பகமாகத் தெரியவந்துள்ளது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே ஒபாமாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், ஆயுதங்களைக் கைவிடுவதாகவும் புலிகளின் சர்வதேச தொடர்பாளர் செ.பத்மநாதன் அறிவித்திருந்தார். மூன்றாம் தரப்பு ஒன்றிடம் ஆயுதங்களை ஒப்படைக்கப் புலிகள் தயாராக இருப்பதாக நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹேய்ம் இன்று திங்கட்கிழமை காலை அறிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிகள் ஓரளவு முன்னேற்றம் கண்டு, இது தொடர்பான செய்தி இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட முன்னர் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை இலங்கை அரசாங்கம் வெளியிட்டது. வன்னியில் இராணுவ முற்றுகைக்குள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு சில உறுதிமொழிகள் உலக அளவில் செயற்படும் புலிகள் இயக்க ஆதரவாளர்களால் வழங்கப் பட்டிருந்ததாகவும், எனினும், எதுவும் நடைபெறாமலே அனைத்தும் முடிந்து விட்டதாகவே ஊகிக்க முடிகிறது என்றும் கொழும்பு அரசியல் அவதானி ஒருவர் கூறினார்.
Average Rating