மனிதநேயப் பணியாளர்கள் முகாம்களுக்குள் நுழைய தடையில்லை: விஜே நம்பியார்
இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவிசெய்வதற்காக உள்ளூர் பணியாகர்களை முகாம்களுக்குள் அனுப்பி மனிதநேயப் பணிகளை முன்னெடுப்பது பற்றி ஐ.நா. ஆராய்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் அலுவலக சிரேஷ்ட அதிகாரி விஜே நம்பியார் கூறியுள்ளார். “முகாம்களுக்குள் வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் வழங்கப்படும் நேரத்துக்குள் வாகனங்கள் உட்செல்லமுடியும். ஆனால், மனித நேயப் பணியாளர்கள் முகாம்களுக்குள் நுழைவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை” என வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் விஜே நம்பியார் தெரிவித்தார். முகாம்களிலுள்ள பொது மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாதவாறு அரசாங்கத்தின் உதவியுடன் முகாம்களுக்கு சென்று வருவது குறித்து ஐ.நா. ஆராய்ந்து வருகிறது. பெருமளவான வாகனங்கள் முகாம்களுக்குச் சென்று வருவதால் அங்கிருக்கும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அரசாங்கம் கவலை வெளியிட்டதாக விஜே நம்பியார் கூறினார். “இலங்கையின் தலைமைத்துவம் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் பிரச்சினைக்குத் தீர்வொன்று முன்வைக்கப்படவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்துள்ளார்” என்று நம்பியார் தெரிவித்தார். இதேவேளை, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மெனிக் பாம்; முகாமில் பெருமளவான மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட மனிதநேய அமைப்புக்கள் செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடைவிதித்திருந்தது. இதனால் தமது சேவைகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடவைதில் தாமதம் ஏற்படுவதாக ஐ.நா. அமைப்புக்களும், செஞ்சிலுவைச் சங்கமும் அறிவித்திருந்தது.
Average Rating