சிறிலங்கா, விடுதலைப் புலிகளுக்கு இணைத் தலைமை நாடுகள் எச்சரிக்கை
இலங்கையின் நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இழக்க நேரிடும் என்று சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் எச்சரித்துள்ளன.
டோக்கியோவில் உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டோக்கியோவில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்புக்கான மாநாடு நடத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வேயை உள்ளடக்கிய இணைத் தலைமை நாடுகள் கூட்டம் நடைபெற்றது.
இலங்கையில் வன்முறைகளை சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலிப் புலிகளும் தடுக்க முடியாத நிலையில் இலங்கை பிரச்சனையில் மேலதிக உதவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இலங்கையில் சீர்குலைந்து இருக்கும் நிலைமைகளை மாற்றியமைக்கவும் மீண்டும் அமைதிப் பாதைக்கு திரும்பவும் இருதரப்பினரையும் இணைத் தலைமை நாடுகள் கேட்டுக்கொள்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவர்த்தைகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளை அது கட்டாயம் கைவிட வேண்டும். ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் அரசியல் வழித் தீர்வுகாண அரசியல் சமரசங்களை அதுவெளிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இலங்கையின் அனைத்து மக்களினது ஜனநாயக உரிமைகளை உள்ளடக்கியதாக அந்தத் தீர்வு இருக்கும். அதற்கான சாதகமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ளும். இதை மேற்கொள்ளத் தவறினால் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் தனிமைப்படுத்தப்படும்.
தமிழ் மக்களினது சட்டப்பூர்வமான உரிமைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முகம் கொடுத்து தீர்வு காண வேண்டும். தனது கட்டுப்பாட்டுப் பகுதியில் பயங்கரவாதம் மற்றும் வன்முறைச் செயல்களை மேற்கொள்ளும் குழுக்களை அது தடுக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் கட்டாயம் அது பாதுகாக்க வேண்டும். வன்முறையாளர்களைத் தண்டிக்க வேண்டும். முஸ்லிம்களை உள்ளடக்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் உரிமைகள் வழங்கக் கூடிய ஒரு புதிய நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கான பாரிய அரசியல் மாற்றங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் உதவும். அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால் சர்வதேச சமூகத்தினது ஆதரவை இழக்க நேரிடும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.