ஓஸ்லோ பேச்சில் விடுதலைப் புலிகள் பங்கேற்பு: தயா மாஸ்டர்
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தொடர்பாக நடத்தப்பட உள்ள பேச்சுக்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தயா மாஸ்டர் கூறியுள்ளதாவது:
ஓஸ்லோ பேச்சுக்களில் பங்கேற்பது என்று இன்று வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளோம். ஆனால் ஒஸ்லோவில் கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்பு தொடர்பாக மட்டுமே பேச்சுக்கள் நடைபெறும். அமைதிப் பேச்சுக்கள் அல்ல.
ஐரோப்பியத் தடை தொடர்பாக எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாட்டையும் இந்தத் தடையானது அமைதி முயற்சியை பாதிக்கும் என்பதையும் நோர்ட்டிக் நாடுகள் மற்றும் அனுசரணையாளர்களிடம் எமது குழுவினர் எடுத்துக் கூறுவர் என்றார் அவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவினர் எதிர்வரும் 5 ஆம் நாள் ஓஸ்லோ புறப்பட்டுச் செல்கின்றனர்.
இதனிடையே ஓஸ்லோ பேச்சுக்களில் பங்கேற்கச் செல்லும் விடுதலைப் புலிகளின் குழுவினருக்கு அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுடாக கொழும்பிலிருந்து ஓஸ்லோ செல்வதற்கான உரிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் நேற்று வியாழக்கிழமை கூறியிருந்தார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல, அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளினூடாக விடுதலைப் புலிகள் குழுவினர் பயணிக்கின்ற போது அவர்களுக்கான முழுப் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கிறோம் என்று கூறினார்.