ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிவரும் 5ம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது..!
கடந்த ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஐவர் அடங்கிய நீதவான் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து ஜெனரல் சரத் பொன்சேகாவினால் உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எதிர்வரும் ஜூலை மாதம் 5ம் திகதி இந்த மனு மீதான விசாரணைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் சிராணி பண்டாரநாயக்க கே.ஸ்ரீபவன் பீ.ஏ. ரத்நாயக்க எஸ்.ஐ.இமான் ஆகிய நீதவான்களினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இலங்கை மக்கள் சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் தங்களது ஜனாதிபதியை தெரிவு செய்யவில்லை எனவும் இதனால் மீள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக தம்மை நியமிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் வாக்குகள் வேட்பாளர்கள் முன்னிலையில் மீளவும் எண்ணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 21 வேட்பாளர்கள் விமல் வீரவன்ச தேர்தல் ஆணையாளர் ஹட்சன் சமரசிங்க ராசீக் சரூக் காலிங்க இந்ததிஸ்ஸ ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பல்வேறு வழிகளில் ஆளும் கட்சிக்கு சார்பான வகையில் சட்டவிரோத பிரச்சாரங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating