வவுனியா முகாம்களிலிருந்து சுமார் 17,000பேர் மீள்குடியேற்றம்..
வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவர்களுள் சுமார் 17,000பேர் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர்; கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக் குடியமர்த்துவதற்காக அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் வவுனியா மாவட்டத்திலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட பகுதிகளிலிருந்து படையினர் தமது முகாம்களை அகற்றும் பணியை ஆரம்பித்துள்ளதுடன், முதற்கட்டமாக பேயாடிகூழாங்குளம் முகாமிருந்த பகுதியில் 65குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப் படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வவுனியா பூவரசன்குளம் விமானப்படை முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. படையினர் வவுனியா மாவட்டத்தின் தனியார் மற்றும் அரசகாணிகள் கட்டடங்களை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர் பாலமோட்டை சேமமடு பகுதிகளில் 500 குடும்பங்களை நாளையதினம் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சகல கிராமசேவகர் பிரிவுகளிலும் 6333 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 21,400பேர் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். வவுனியா பெரியதம்பனை, பறையனாலங்குளம், பிரமனாலன்குளம், கணேசபுரம், கோதண்டநொச்சிகுளம், வீமன் கல்லு பகுதிகளிலும் 500 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவுள்ளனர். பிரப்பம்மடு பகுதியில் 25 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு ஒப்படைக்கப் பட்டுள்ளன. ரத்வத்தேகம பகுதிக்கும் பிறப்பன்மடு பகுதிக்கும் மின்சாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன என்றும் அரசஅதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating