சுகோய் போர் விமானத்தில் பறந்தார் கலாம்: வரலாறு படைத்தார்
ஜனாதிபதி அஜனாதிபதி அப்துல் கலாம் இன்று சுகோய்30 ரக போர் விமானத்தில் பறந்தார். ஏற்கனவே நீர்மூழ்கியில் பயணம் மேற்கொண்ட கலாம் ரஷ்யாவின் சுகோய் போர் விமானத்தில் பறக்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து இந்திய விமானப் படையின் சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானத்தில் அவர் பறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஒலியை விட இரு மடங்கு வேகத்தில் பறக்கும் இந்த விமானத்தில் பயணிக்க கலாமுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. போர் விமானத்தில் பறக்கும் அளவுக்கு கலாம் ‘பிட்’ஆக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 74 என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று கலாமின் கனவுப் பயணம் அரங்கேறியது.
புனே நகரில் உள்ள லொகேகான் விமானப் படைத் தளத்தில் இருந்து சுகோய் விமானத்தில் கலாம் பயணித்தார். விமானிகள் அணியும் ஜி சூட் அணிந்து மிகவும் ஆர்வத்துடன் கலாம் சுகோயில் சென்றார்.
ஸ்கூவாட்ரன் பிரிவின் கமாண்டிங் ஆபிசர் விங் கமாண்டர் அஜய் ரத்தோர் விமானத்தை இயக்கிச் சென்றாõர். ஒலியின் வேகத்தை விட அதிகமாக வேகத்தில் விமானத்தை இயக்கிய விமானி, சுகோயின் தொழில்நுட்பங்களை கலாமுக்கு விளக்கினார்.
இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை கலாம் பெற்றுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் வானில் சுற்றிய கலாம் தரையிறங்கியபோது அவருக்கு விமானப் படையினர் மிகச் சிறப்பான வரவேற்பளித்தனர்.