இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான சாட்சியங்களை அளிக்குமாறு ஐ.நா நிபுணர் குழு அழைப்பு..!
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான சாட்சியங்களை அளிக்குமாறு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால், நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு சாட்சியங்களை திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான எழுத்து மூல சாட்சியங்களை சமர்ப்பிக்க முடியும் என நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது. சாட்சியமளிப்போர் பத்து பக்கங்களுக்கு மேற்படாத வகையில் தமது சாட்சியங்களை எழுத்து மூலம் அளிக்க முடியும் எனவும், தொடர்பு விபரங்கள் இந்த சாட்சிய அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மார்சூகீ தாருஸ்மான் தலைமையிலான நிபுணர்கள் குழு விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நிபுணர்கள் குழுவிற்கு சாட்சியமளிப்போர் தொடர்பான விபரங்கள் மிகவும் இரகசியமான முறையில் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது இரு தரப்பினரும் இணங்கிய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வேளை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பணிகளுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனை ஓர் விசாரணை குழுவாக நோக்கக் கூடாது எனவும், தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பான் கீ மூன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating