போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பிய இரு கைதிகள் சுட்டு கொலை
மலேசியாவில், போலீசாரின் கண்களில், மிளகாய் பொடியை தூவி, தப்பித்து சென்ற கைதிகளில் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மலேசியாவின், பினாங்க் பகுதியை சேர்ந்த, ஒன்பது கிரிமினல் குற்றவாளிகள், உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவதற்காக, இரண்டு நாட்களுக்கு முன், அழைத்து செல்லப்பட்டனர். போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட, இந்த கைதிகள், தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். சோதனை சாவடி அருகே, போலீசார், வாகனத்தின் பின் கதவை திறந்த போது, கைதிகளில் ஒருவன், தான் வைத்திருந்த மிளகாய் பொடியை, போலீசாரின் கண்களில் தூவினான். இதனால், போலீசார் தடுமாற்றமடைந்தனர். இதை பயன்படுத்தி,ஏழு கைதிகள்தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய கைதிகளை, போலீசார், தீவிரமாக தேடினர். இதற்கிடையே, இவர்களில் இரண்டு பேர், கார் ஒன்றில் தப்பி சென்ற போது, அவர்களை போலீசார் துரத்தி சென்றனர். கைதிகள் சென்ற கார், ஆற்று பாலத்தின் சுவரின் மேல் மோதி நின்று விட்டது. இதையடுத்து வெளியே வந்த கைதிகள், போலீசை நோக்கி சுட்டனர். இந்த சண்டையில், இரண்டு கைதிகளையும், போலீசார் சுட்டுக்கொன்றனர். இரண்டு நாட்களுக்கு முன், தப்பி சென்ற மீதமுள்ள, ஐந்து கைதிகளை தேடும் பணி தொடர்கிறது.
Average Rating