ரொறன்ரோ சகோதரிகளின் விடுமுறையை விவகாரமாக்கிய புளோரிடாப் பொலிஸார்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்று மியாமி கடற்கரை. ஆண்டுதோறும் விடுமுறைக் காலங்களில் கனடிய மக்கள் பலர் அங்கு செல்வதும், பலர் உல்லாசமாக அங்கே பொழுதைக் கழிப்பதுமுண்டு, கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது குடும்பத்துடன் டிஸ்னி வோர்ல்ட்டுக்குச சென்ற இரு சகோதரிகளை மியாமி கடற்கரை காவல்துறையினர் கைது செய்து ஒரு நாள் இரவு முழுவதும் சிறைச்சாலையில் அடைத்ததுடன் , அவர்களிடம் வன்மமான முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அருவருக்கத்தக்க தகாத வார்த்தைகளினால் தங்களை அதிகாரிகள் திட்டியதாகவும் சகோதரிகள் இருவரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் சூளுரைத்துள்ளனர் கனடிய சகோதரிகள்.
மைக்கல், 20 மற்றும் அஞ்சேலினா, 24, இருவரும் உடன் பிறந்த சகோதரிகள். டிசம்பர் 23 ஆம் திகதியன்று மியாமி கடற்கரையில் மது அருந்தி விட்டு நண்பர்களுடன் உட்கார்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்த இவர்களை அணுகிய மியாமி கடற்கரை காவல்துறை அதிகாரிகள் “dirty Canadians” என்றும் மேலும் சில அருவருக்கத்தக்க வார்த்தைகளாலும் திட்டியதோடு, சகோதரிகள் இருவரையும் பேச விடாமல் மனிதாபிமானமற்ற வகையில் சிறையில் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் சகோதரிகள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. சகோதரிகள் கொடுத்துள்ள புகார்கள் அனைத்தும் பொய்யானது என்றும் சில ஆண்களுடன் உட்கார்ந்து கஞ்சா உபயோகித்துக் கொண்டு பிறருக்கு இடையூறாக இருந்ததாலேயே பெண்மணிகளை கைது செய்ய நேர்ந்ததாக விசாரணையின் போது காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
Average Rating