இந்தியாவின் கேரள மாநிலத்தில், சிறுவர் துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் செருப்பு மாலையுடன் ஊர்வலம்!
இந்தியாவின் கேரள மாநிலத்தில், தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்பட சிறுசிறு வியாதிகளுக்கு நாட்டு வைத்தியம் செய்யும் ஒருவரிடம், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர், பெற்றோருடன் சென்றுள்ளார். திருவனந்தபுரம் வைப்பின் பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியான இவர், தீக்காயத்துக்காக சிகிச்சை பெறவே அங்கு சென்றுள்ளார். அந்த சிறுமியை நாட்டு வைத்தியர் ஜோசப், தனியறைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளார். அப்போது சிறுமி அழுது புலம்பினார். அவர் காயம் காரணமாக அழுவதாக நினைத்த பெற்றோர், பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
சில நாட்களுக்கு பிறகு அந்த சிறுமி பாடசாலையில் வைத்து அழுது கொண்டே இருந்ததால் ஆசிரியர்கள் அந்த சிறுமியிடம் காரணத்தை கேட்டனர். அப்போது அந்த சிறுமி நாட்டு வைத்தியரிடம் சென்றதையும் அங்கு அந்த வைத்தியர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதையும் கூறியுள்ளார். இந்த தகவல் பாடசாலை ஆசிரியர்கள் மூலம் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. ஆத்திரம் அடைந்த அவர்கள் நாட்டு வைத்தியருக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் நாட்டு வைத்தியரை தங்களின் ஊருக்கு பொய் காரணங்கள் கூறி வரவழைத்தனர். அவர் வந்ததும் ஊர் மக்களும் அப்பகுதி மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சியினரும் சேர்ந்து அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக பக்கத்து ஊருக்கு அழைத்து சென்றனர்.
அப்போது சிலர் அவரை தாக்கவும் செய்தனர். இந்த தகவல் கொச்சி பொலிசாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாட்டு வைத்தியரை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.
பின்னர் நாட்டு வைத்தியரை தாக்கியதாக மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சியை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
Average Rating