பதுக்கி வைக்கப்பட்ட வெள்ள நிவாரணம் மீட்பு; மன்னார் ப.நோ.கூ.சங்கத்திற்கு சீல்
அண்மையில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களில் ஒருதொகுதி பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படாத நிலையில் மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ் உலர் உணவுப் பொருட்கள் நேற்று சனிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன. இவை மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்குரிய உலர் உணவுப் பொருட்களில் அரிசி, மா, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், நெத்தலிக் கருவாடு ஆகிய உணவுப் பொருட்களே மிகவும் பழுதடைந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சுகாதாரமின்றிக் காணப்பட்ட மன்னார் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சியசாலையை மன்னார் மாவட்ட பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி குணசீலன் சீல் வைத்து மூடினார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இவ் உலர் உணவுப் பொருட்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தால் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக மக்களுக்கு வழங்கப்பட்டன.
இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் போதியளவில் வழங்கப்படவில்லையென வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்கள் தெரிவித்திருந்தனர்.
வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்குரிய உலர் உணவுப் பொருட்களில் அரிசி, மா, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், நெத்தலிக் கருவாடு ஆகியவை மன்னார் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.
இப்பொருட்கள் வைக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் எந்த அதிகாரிகளும் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மூடியிருந்த இக்களஞ்சியசாலையிலிருந்து சில நாட்களாக துர்நாற்றம் வீசிவந்த நிலையிலேயே பழுதடைந்த இவ் உலர் உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Average Rating