யாழ்ப்பாண மக்கள் அமைச்சர் டக்ளஸிடம் தெரிப்பு
அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வும், நிரந்தர சமாதானமும், அமைதியும் எதிர்கால வாழ்க்கைக்கான நிரந்தர ஜீவனோபாய வழிமுறைகளுமே தங்களுக்குத் தேவை என்றும் தாங்கள் இவற்றையே எதிர்ப்பார்த்து வாழ்ந்து வருவதாகவும் நேற்று ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவை யாழ், அலுவலகத்தில் வைத்து சந்தித்த யாழ் மாவட்ட மக்கள் தெரிவித்தனர்.
யாழ் மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அம்மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி, அப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முகமாகவும் கடந்த 6ம்திகதி யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவை மக்கள் சந்தித்தப் பேசினர்.
மீண்டும் ஒரு யுத்தித்தை நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பார்க்கவில்லை என்று தெரிவித்த மக்கள் அமைதியும், சமாதானமுமே தங்களது பிராத்தனையாகும் என்றும் தெரிவித்ததுடன், நாட்டின் நிரந்தர சமாதானத்தக்கான ஏற்பாடுகள் விரைவில் ஏற்பட்டு தங்களது அன்றாட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துத் தருமாறும் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
அமைச்சர் டக்ளஸ் சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களையும், அபிவிருத்திப் பணிகளையும் நடைமுறைப்படுத்தினார்.