ஜனாதிபதியுடன் மல்யுத்தம் செய்யும் முஸ்லிம் அமைச்சர்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்டு இருக்கின்ற பனிப் போர் குறித்த செய்திகள் கொழும்பு ஊடகங்களைக் கலக்கிக் கொண்டு இருக்கின்றன. நகர விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பௌசி. முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா. இருவருக்கும் இடையில் ஏற்பட்டு இருக்கின்ற போட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் பலரையும் அசைத்து விட்டது என மாற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
“ சுதந்திர கட்சியின் கொழும்பு மத்திக்கான அமைப்பாளர் அமைச்சர் பௌசி. ஆனால் கொழும்பு மத்தியில் அரைவாசியை பிரதி அமைச்சர் பைசரின் பொறுப்ப்பில் கொடுக்க சுதந்திர கட்சியின் தலைவர் என்கிற வகையில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
அண்மையில் இது சம்பந்தமாக கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது. பிரதி அமைச்சர் பைசரையும் கொழும்பு மத்திக்கான அமைப்பாளராக நியமிக்கின்றமை குறித்து பேசப்பட்டது.
இந்நியமனத்தை கடுமையாக ஆட்சேபித்தார் அமைச்சர் பௌசி. இவரது ஆட்சேபனைகள் பொருட்படுத்தப்படவில்லை. இதனால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார்.
இன்னும் ஒரு முஸ்லிமை அமைப்பாளராக நியமிக்கின்ற தேவை என்ன? தமிழர்கள் அல்லது சிங்களவர்களின் வாக்குகளை அதிகரிக்க வேண்டும் என்கிற தேவை இருக்கின்ற பட்சத்தில் தமிழர் அல்லது சிங்களவர் ஒருவர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்று ஆட்சேபனையில் அமைச்சர் பௌசி சொன்னார் என்று தெரிகின்றது.
இது அரசியலில் இருந்து இவரை ஓரம் கட்டுகின்ற செயல்பாடாகவே பௌசிக்கு படுகின்றது. பௌசி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவர். 1994 ஆம் ஆண்டில் இருந்து அமைச்சராக இருந்து வருபவர். இப்பிரிவினையை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றும் அப்படியொரு அமைப்பாளர் பதவியே வேண்டாம் என்றும் கூட்டத்தில் சத்தம் இட்டு இருக்கின்றார். ”
இவ்வாறு இவ்வூடகங்கள் செய்தி பிரசுரித்து உள்ளன.
Average Rating