ஒடிசாவில் 3 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நிர்வாண ஊர்வலம்
ஒடிசா மாநிலம் கந்தர்கர் மாவட்டத்தில் சுபேத்கா பிளாக்கில் சிர்லகா எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் பரவி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அவதிப்பட்டனர்.
இதற்கிடையே ஊரில் மர்மநோய் பரவி இருப்பதற்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டதே காரணம் என்று ஊருக்குள் தகவல் பரவியது. அந்த ஊரில் 3 வயதான பெண்களும் ஒரு முதியவரும் தனி வீட்டில் வசித்து வருகிறார்கள். அவர்கள்தான் பில்லி சூனியம் வைத்திருப்பார்கள் என்று கிராம மக்கள் சந்தேகப்பட்டனர்.
நேற்று ஒட்டு மொத்த கிராம மக்களும் திரண்டு அவர்களது வீட்டுக்கு சென்றனர். வயதான 3 பெண்களையும், முதியவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். பிறகு 3 பெண்களையும் நிர்வாணப்படுத்தி அவர்கள் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தினார்கள்.
பிறகு 3 பெண்களையும் கிராம மக்கள் தெரு, தெருவாக நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். மேளதாளம் முழங்க இந்த ஊர்வலம் நடந்தது. கிராமமே ஒன்று திரண்டு நடத்திய இந்த கொடூரம் பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது.
போலீசார் விரைந்து சென்று 3 பெண்களையும், முதியவரையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிர்லகா கிராமத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Average Rating