வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் தொலைபேசி மிரட்டலின் பின் குத்திக் கொலை
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாறாஇலுப்பை கிராமத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி மாறாஇலுப்பை மகிழமோட்டையை சேர்ந்த 38 வயதான ஆறுமுகசாமி பிரேமசீலன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (16) இரவு 9 மணியளவில் கொலை செய்யப்பட்டவரின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்ததாகவும் இதில் உன்னை கொலை செய்வோம் என தெரிவித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது மனைவியையும் அழைத்துச்சென்று இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள இராணுவ பொலிஸ் காலவரணில் முறையிட்டபோது அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கூறவே இருவரும் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
எனினும் இன்று (17) அதிகாலை இவர்களது வீட்டிற்கு வந்த இனந்தெரியாதோர் கத்தியால் பிரேமசீலனை குத்திக் கொன்றதுடன் கூக்குரல் இட்ட மனைவியின் வாயினுள் சீலையை வைத்து அடைத்துள்ளனர்.
இதன்பின்னர் பிரேமசீலனை அவரது வீட்டில் உள்ள கிணற்றுக்கு அருகில் கொண்டு சென்று போட்டு விட்டு தப்பியுள்ளனர் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் நெடுங்கேணி பொலிஸாரிடம் கேட்டபோது,
நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தினர்.
Average Rating