இலங்கை நடத்திய போர் வெறியாட்டம்: ஆவணப்படமாக டெல்லியில் வெளியிடப்பட்டது (VIDEO)
இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சனல் 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூசன் க்பளப்பில் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பானது. சர்வதேச மன்னிப்பு சபை இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதில் இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் சிறீலங்கா இராணுவம் கொத்து, கொத்தாக குண்டுவீசிய கொடூரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், ஊரெங்கும் மக்கள் உயிரிழந்து சடலங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தாயும் குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடப்பது, மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் உடல் சிதைந்த நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பெண்கள் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் காட்சி சிறீலங்கா இராணுவத்தின் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்துவாக இருக்கிறது. மேலும், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பல பெண்களை ஒரு டிரக்கில் ஏற்றி இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
சிறீலங்கா இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஷ், மன்றாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சிறீலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தியிருப்பதும், இதனால் தமிழர்களின் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்பட்டதாகவும் நோ பயர் ஸோன் ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 நிமிடக் காட்சிகளை கொண்ட இந்த ஆவணப் படம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating