அலுகோசுகள் இருவரையும் காணவில்லை
புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு அலுகோசுகளையும் (தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்) காணவில்லை என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான பயிற்சி வெலிக்கடை மற்றும் போகம்பறை ஆகிய சிறைச்சாலைகளில் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கான முதல் 14 நாட்கள் பயிற்சி வெலிக்கடை சிறையிலுள்ள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் ஆரம்பமானது. அவர்கள் இருவருக்கான நியமன கடிதங்களும் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்த வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் இவ்விருவம் நீர்கொழும்பு மற்றும் பிட்டிபன பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.
தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவிக்கு ஆள் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியிருந்தது. அதன்பிரகாரம் பெண்கள் இருவர் உட்பட பல இந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அதனடிப்படையில் அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கு பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன. இந்நிலையிலேயே இவ்விருவரும் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தூக்குத் தண்டனை நிறைவேற்றும் கடமையில் இருந்தவர்; பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவ்வெற்றிடத்திற்கு புதியவர் ஒருவரை சேர்க்கவேண்டிய தேவை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஏற்பட்டது.
அதனடிப்படையிலேயே விண்ணப்பங்கள் கோரப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
1976 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததால் தூக்குத் தண்டனை நிறைவேற்றுநருக்கான அவசியம் இருக்கவில்லை. இலங்கையில் இறுதியாக 1976 ஆம் ஆண்டு தங்காலையைச் சேர்ந்த சந்திரதாஸ என்பவர் தூக்கிலிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating