சுப்பிரமணியன் சுவாமி உருவப்படத்தை எரித்தது தமிழக காங்கிரஸ்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயல்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினர் திருச்சியில் போராட்டம் நடத்திடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சி இலங்கைத் தீர்மானம் தொடர்பிலோ அல்லது ஏனைய விடயங்களிலோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாத நிலையில் திருச்சி ரயில் நிலையம் அருகே இன்று சனிக்கிழமை காலை ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தமிழருக்குத் துரோகம் செய்யும் சுப்பிரமணியன் சுவாமியை தமிழ்நாட்டுக்குள் விடக்கூடாது என்றும் இந்தியாவில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல்கள் எழும் நிலையில் துரோகம் செய்துவரும் அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டுமென்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் சுப்பிரமணியன் சுவாமியின் உருவப்படத்தை துரோகி ஒழிக என்ற முழக்கங்களுடன் காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். தமிழக காங்கிரஸ் கட்சியினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக களமிறங்கியது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating