விமானத்தாக்குதலில் காயத்துடன் தப்பிய ஜர்க்காவியை ராணுவம் அடித்துக் கொன்றது நேரில் பார்த்தவர் பேட்டி
ஈராக் நாட்டின் அல்கொய்தா தலைவனான அபு முசாப் அல் ஜர்க்காவி பதுங்கி இருந்த வீட்டில் அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் காயம் அடைந்த அவனை அதன்பிறகு அடித்துக்கொன்றனர்.ஈராக் சதாம் உசேன் ஆட்சியை விட்டு ஓடியதும் எந்த வித எதிர்ப்பும் இருக்காது என்று எதிர்பார்த்த அமெரிக்காவின் நினைப்பில் மண்ணைப்போட்டவன் ஜர்க்காவி. சதாம்உசேன் ஓடியதும் அமெரிக்க ராணுவம் மீது கொரில்லா தாக்குதல் நடத்தி அதை நிலைகுலையச்செய்தான்.
தற்கொலை தாக்குதல், ஆள் கடத்தல் தலைவெட்டுதல் என்று அவன் நடத்திய வன்முறைகள் பயங்கரமானவை. அவனைப்பிடித்தாலோ அல்லது அவனைக்கொன்றாலோ தான் அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது.
இந்த நிலையில் அவன் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது பற்றிய தகவல் ராணுவத்துக்கு கிடைத்தது.உடனே போர்விமானங்கள் அந்தவீட்டின் மீது குண்டு வீசித்தாக்கின. இதில் அவன்கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இப்போது அவன் தாக்குதலில் கொல்லப்படவில்லை என்றும் அவன் அடித்துக்கொல்லப்பட்டான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தசம்பவத்தை விவசாயத்தொழிலாளி அலி அப்பாஸ் நேரில் பார்த்தார். அவர் நிருபர்களிடம் கூறிதாவது:-
அமெரிக்க ராணுவ விமானங்கள் 2 குண்டுகளை வீசிவிட்டுச்சென்றபிறகு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருந்து முனகல் சத்தம் வருவது கேட்டது. நானும் இன்னும் 6 பேரும் உள்ளே சென்று பார்த்தோம். அங்கு இடிபாடுகளுக்கு இடையில் ஜர்க்காவி ரத்தக்காயத்துடன்படுத்துக்கிடந்தான்.அவன் உடலில் உயிர் இருந்தது. அவனை நாங்கள் தூக்கிக்கொண்டு 100 மீட்டர் தூரம் வந்திருப்போம்அப்போது ஈராக் மற்றும் அமெரிக்க வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் எங்களைப்பார்த்து சத்தம் போட்டனர்.
ஜர்க்காவியிடம் சென்ற வீரர்கள் உன் பெயர் என்ன என்று திரும்பத்திரும்ப கேட்டனர். அவன் பதில் எதுவும் சொல்லாமல் முனகிக் கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த அங்கியைப்பார்த்து அவர்கள் அஞ்சினர். தற்கொலைப் பெல்ட் எதுவும் அணிந்திருப்பானோ என்று அவர்கள் பயந்தனர். அதன் பிறகு அவனை ராணுவவீரர்கள் அடித்துக் கொன்றனர். அவன் வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது.அவன் இறந்த பிறகு அவன் உடலை ராணுவம் ஆம்புலன்சில் ஏற்றிச்சென்றது. இவ்வாறு அலி அப்பாஸ் கூறினார்.