இந்தோனேசிய முன்னாள் அதிபர் மீதான ஊழல் வழக்கை தொடர்ந்து நடத்த நீதிமன்றம் ஆணை
இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோ மீதான ஊழல் வழக்கைக் கைவிட முடிவு செய்தது தவறு; அவ் வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று இந்தோனேசிய நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 32 ஆண்டு காலம் இந்தோனேசியாவை ஆட்சி செய்த சுகார்த்தோ பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுப் பணத்தைக் கையாடிவிட்டார் என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அவர் மிகவும் உடல்நலம் குன்றி இருப்பதால் அவர் மீதான ஊழல் வழக்கைக் கைவிட்டு விட அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து அந்த வழக்கு கைவிடப்பட்டது.
ஆனால், அவ்வாறு அந்த வழக்கைக் கைவிட்டது சட்டவிரோதம் என்றும், எனவே, முன்னாள் அதிபர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கோரி 3 பொதுநல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அதை நீதிபதி அன்டி சாம்சங் நுகன்ரோ விசாரித்தார்.
“”வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டாலோ அல்லது அந்த வழக்கு விவகாரம் காலாவதி ஆகிவிட்டாலோ அல்லது ஏற்கெனவே ஏதாவது நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டாலோதான் ஒரு வழக்கைக் கைவிட முடிவு செய்ய முடியும்.
“”குற்றம் சாட்டப்பட்டவர் நோயாளியாக இருப்பதால், அவருக்கு இயன்ற நேரத்தில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானால் போதும் என்று உச்ச நீதிமன்றம் அளித்து இருக்கும் விதிவிலக்கைக் காரணம் காட்டி, வழக்கை ரத்து செய்ய முடியாது. எனவே, சுகார்த்தோ மீதான ஊழல் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும்” என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.