சீனாவை அமெரிக்கா உளவுப்பார்த்த தகவலை வெளியிட்ட ஸ்நோடென் தப்பியோட்டம்!!
அமெரிக்காவின் உளவு பிரிவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் ஊழியரான எட்வர்டு ஸ்நோடென் போன் ஒட்டு கேட்பு விவகாரங்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதை உலகிற்கு தெரியப்படுத்தியிருந்தனார். மேலும், தான் அமெரிக்காவில் இருந்தால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி ஹாங்காங் நகரில் உள்ள மறைவிடத்தில் கடந்த மாதம் 20-ம் தேதியிலிருந்து தங்கியிருந்து பல ரகசியங்களை தொடர்ந்து அவர் வெளியிட்டு வந்தார்.
சீனாவின் மொபைல் போன் கம்பெனிகள் மற்றும் பீஜிங் பல்கலை கழகம் ஆகியவற்றின் கம்ப்யூட்டர்களை அமெரிக்கா ஊடுருவி அவற்றில் இருந்து தகவல்களை சேகரித்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலையும் அவர் நேற்று வெளியிட்டிருந்தார். எட்வர்டு ஸ்நோடென்-னை ஹாங்காங்கில் இருந்து நாடுகடத்தி அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தனது உயிருக்கு அமெரிக்க உளவுத்துறையினரால் ஆபத்து உள்ளதாக எட்வர்டு ஸ்நோடென் தெரிவித்திருந்தார்.
எட்வர்டு ஸ்நோடென்-னை ஹாங்காங்கிலிருந்து ரகசிய இடத்திற்கு அழைத்து செல்ல தயார் நிலையில் தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் காத்திருப்பதாக நாடுகடத்தப்பட்ட ஜூலியன் அசாஞ்ஜேக்கு சொந்தமான ‘விக்கி லீக்ஸ்’ அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை ஹாங்காங்கை விட்டு அவர் வெளியேறி விட்டதாகவும் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு செல்லும் ‘ஏரோ ஃபிளைட் எஸ்.யூ. 213’ விமானத்தில் அவர் ஏறிச் சென்றதை சிலர் பார்த்ததாகவும் ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி, மாலை 5.15 மணியளவில் எட்வர்டு ஸ்நோடென் மாஸ்கோ விமான நிலையத்தை சென்றடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அங்கு அவர் கைது செய்யப்படுவாரா? அல்லது, திருப்பி அனுப்பப்படுவாரா? இல்லையேல்.. ரஷ்யாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவாரா? என்பது புரியாத புதிராக உள்ளது.
Average Rating