உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள் 2பேர் சுட்டுக்கொலை
தாய்லாந்து நாட்டில் ஒரு ஓட்டலில் டி.வி.யில் கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது 2 ரசிகர்கள் சத்தம் போட்டு கத்தியதால் ஆத்திரம் அடைந்த ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.அப்போது ஏற்பட்ட சண்டையில் அந்த 2 ரசிகர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். உலகக்கோப்பை கால்பந்துப்போட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்து நாட்டில் உள்ள கடலோர சுற்றுலா நகரம் பட்டாயா. அங்கு உள்ள ஒரு ஓட்டலின் உணவகத்தில் சிலர் சாப்பிட்டுக்கொண்டே டி.வி.யில் ஒளிபரப்பான கால்பந்துப் போட்டியை பார்த்து ரசித்தனர்.
சாம்லோங்ரோங்சாயேங் (வயது30) மற்றும் 41 வயது சோம்னாக் சோன்குன் ஆகியோர் தங்கள் காதலிகளுடன் உட்கார்ந்து டி.வி.யில் கால்பந்து போட்டியை பார்த்து ரசித்தனர். அப்போது இத்தாலி-கானா நாடுகள் இடையே கால்பந்துப்போட்டி நடந்தது. இத்தாலி முதல்கோல் போட்டபோது அதை டி.வி.யில்பார்த்துக் கொண்டிருந்த அந்த 2 ரசிகர்களும் சத்தம்போட்டு கத்தி ஆரவாரம் செய்தனர்.
பக்கத்து மேஜையில் உட்கார்ந்திருந்த ஒருவர் சத்தம்போட்ட ரசிகர்களைப்பார்த்து அமைதியாகப்பார்க்கும்படி கூறினார். இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பக்கத்து மேஜைக்காரர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதன்பிறகு அவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரைப்போலீசார் தேடிவருகிறார்கள்.