கவிஞர் வாலி காலமானார்..!!
பிரபல பின்னணி பாடலாசிரியரும் கவிஞருமான வாலி தனது 81 வது வயதில் காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கவிஞர் வாலி, கடந்த மாதம் தனியார் வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
டி. எஸ்.ரங்கராஜன் எனும் இயற்பெயருடைய கவிஞர் வாலி, 1931ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தமிழ்நாட்டிலுள்ள திருவரங்கத்தில் பிறந்தார். தமிழ் மேல் தீராத பற்றுக்கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் அதிகம். அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவரது அவாவை அறிந்த அவருடைய பள்ளித் தோழன் ‘மாலி’யைப் போல சிறந்த சித்திரக்கலைஞனாக வரவேண்டும் என்று கூறி ‘வாலி’ என்னும் பெயரைச் சூட்டினார். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகளும் மிகவும் புகழ்பெற்றவை. அதேவேளை, திரைப்படங்களுக்கு 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளதுடன் திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். வாலி 5 முறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர் என்பதுடன், 2007ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating