அம்பியூலன்ஸுக்குள் குழந்தை பெற்ற கர்ப்பிணி..!!
காத்தான்குடி கடற்கரை வீதி குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில், அந்த வீதியினால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோக்கி சென்றுகொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டியினுள்ளேயே கர்ப்பிணித்தாயொருவர் குழந்தை பிறந்த சம்பவமொன்று இடம்பெற்றதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பகுதிநாள் கூட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையிலேயே டாக்டர் ஜாபீர் மேற்கண்டவாறு கூறினார்.
“இந்த வீதி குண்றும் குழியுமாக இருப்பதால் இந்த வீதியினால் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் செல்லும் போது சிரமங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
அத்தோடு ஒரு நாளைக்கு சராசரியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து பத்து நோயாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ய வேண்டி ஏற்படுகின்றது.
இதன் போதெல்லாம் இந்த வீதியினால் அம்பியூலன்ஸ் வண்டி செல்லும் போது நோயாளர்கள் சிரமங்களை அனுபவிக்கின்றனர். இவைகளை கருத்திற்கொண்டு இந்த வீதியின் அபிவிருத்தி வேலைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என டாக்டர் ஜாபீர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் இந்த வீதி புனரமைப்பு வேலைகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Average Rating