ஸ்பெயினில் ரயில் தடம் புரண்டதில் 56 பேர் பலி..!
ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் நேற்று ரயில் ஒன்று தடம் புரண்டதில் 56 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் இன்று இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களுள் ஒருவரான புனித ஜேம்சிற்கு அஞ்சலி செலுத்தும் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
எனவே, சாண்டியாகோவில் உள்ள பாரம்பரியப் புகழ்பெற்ற எல் கேமினோ ஆலயத்தில் நடைபெறும் இந்த விழாவில் பங்கு கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அப்போது பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
வேகமாக சென்றுகொண்டிருந்த ரயில் வளைவு ஒன்றில் திரும்பும்போது தண்டவாளத்திலிருந்து விலகியதாகவும், அப்போது ரயில் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்ததாகவும் ரயிலில் பயணித்த ரிக்கார்டோ மாண்டெஸ்கோ என்பவர் கூறினார்.
நிறைய பயணிகள் பெட்டிகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டதாகவும், ரயில் கவிழ்ந்ததினால் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலியானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மற்றொரு பெண் பயணி ரயில் கவிழ்வதற்கு முன்னால், தான் வெடி சத்தத்தைக் கேட்டதாகக் கூறியுள்ளார்.
நேற்று நடந்தது ஒரு விபத்து என்றே பிராந்திய அலுவலகத்தில் சொல்லப்பட்டது. ஆயினும், இறந்தவர்கள் விபரம் இன்னும் சரிவரத் தெரிவிக்கப்படவில்லை.
அங்கிருந்த சிதைவுகள், கடந்த 2004ஆம் ஆண்டில் தீவிரவாதிகளின் சதியால் 191 பேர் கொல்லப்பட்ட மாட்ரிட் ரயில் விபத்தை நினைவுபடுத்தியது.
ரயில் ஓட்டுனர் இருந்த பகுதியும் உடைந்த சிதைவுகளில் கிடந்ததால் விபத்து பற்றி உடனடியாகக் கருத்து கேட்பதற்கு ஊழியர்கள் யாரும் அங்கு கிட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating