நடிகை கனகாவால் தன் உயிருக்கு ஆபத்து என தந்தை குற்றச்சாட்டு..!!
நடிகை கனகாவால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பொலிசார் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கனகாவின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
கரகாட்டகாரன், தங்கமான ராசா, பெரிய வீட்டு பிள்ளை, தாலாட்டு கேட்குதம்மா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கனகா.
மறைந்த பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகளான இவர் தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கனகா சில தினங்களுக்கு முன்னர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு மறுப்பு தெரிவித்த கனகா, தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், தனது தந்தை இது போன்ற வதந்திகளை பரப்பி இருக்கலாம் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் எழும்பூரில் உள்ள பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கனகாவின் தந்தை தேவதாஸ் ஒரு புகார் அளித்தார். அதில் என் மகள் கனகா சில தினங்களாக மன இறுக்கத்துடன் காணப்படுகிறார்.
கனகா இறந்ததாக நான் வதந்தி பரப்பியதாக என்மீது அவர் குற்றம் சாட்டுகிறார். அதில் எந்த உண்மையும் இல்லை.
மேலும் சினிமா துறையில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காகவே தான் இறந்து விட்டதாக தானே கூறி விட்டு தற்போது என் மீது பழி போடுகிறார் என்றும் சொல்லப்போனால் அவரால் தான் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
எனவே பொலிசார் தனக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து இது போன்று என் மீது அவதூறு பரப்பினால் கனகா பற்றி மேலும் பல உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டியது வரும் என்று தெரிவித்துள்ளார்.
Average Rating