3 நாட்கள் `லிப்டி’ல் சிக்கி தவித்த நோயாளி
ஜெர்மனியை சேர்ந்தவர் கர்ல் ஹெய்ன்ஸ் சுமித். 68 வயதான இவர் பெர்லின் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 3 நாட்களாக அவரை ஆஸ்பத்திரி படுக்கையில் காணவில்லை. இதனால் அவரை ஆஸ்பத்திரி ஊழியர்களும், உறவினர்களும் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. கடைசியில் பழுதான லிப்டை சீர் செய்ய டெக்னீஷியன்கள் சென்ற போது, அந்த லிப்டில் சக்கர நாற்காலியில் அவர் மயக்கநிலையில் இருந்ததை அவர்கள் கண்டனர். மேலும் அவர் 80 மணி நேரம் பழுதான லிப்டில் சிக்கி இருந்ததும் தெரியவந்தது.
முதல் உதவி சிகிச்சை அளித்த பிறகு அவர் கூறுகையில், “புகை பிடிப்பதற்காக நான் வார்ட்டை விட்டு வெளியே வந்தேன். சக்கர நாற்காலி மூலம் லிப்டில் ஏறினேன். லிப்ட் பாதியில் நின்று போனது. யாராவது உதவுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் யாருமே வரவில்லை. தண்ணீர் பாட்டில் எடுத்து வரவில்லை. என் பாக்கெட்டில் பிஸ்கெட் பாக்கெட் இருந்ததால் பிழைத்தேன். அதை தின்று சமாளித்தேன். உயிருடன் லிப்டை விட்டு வெளியே வருவேன் என நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.
லிப்ட் பழுதாகி 3 நாட்களாகியும் அதை யாரும் கவனிக்கவில்லை. நோயாளியையும் பத்திரமாக பாதுகாக்கவில்லை. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது வழக்கு தொடரப்போவதாக சுமித்தின் மகன் ரொலண்டு கூறி இருக்கிறார். லிப்டில் சிக்கி தவித்த சுமித் லிப்ட் டெக்னீஷியனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.