தாய்லாந்தில் அடுத்தடுத்து 41 குண்டுகள் வெடித்தன 2 பேர் பலி; 16 பேர் காயம்
தாய்லாந்து நாட்டில் அடுத்தடுத்து 41 குண்டுகள் வெடித்தன. தீவிரவாதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர். தாய்லாந்து நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தெற்கு பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள பட்டனி, நராதிவாத் மற்றும் யாலா மாநிலங்களில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து 12-க்கும் அதிகமான இடங்களில் குண்டுகள் வெடித்தன. போலீஸ் நிலையம், சோதனை சாவடிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மொத்தம் 41 குண்டுகள் வெடித்தன.
கோக்போயி என்ற இடத்தில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் குண்டு வெடித்ததில் புத்தமத பிரமுகர் ஒருவர் செத்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த கடைக்கு வழக்கமாக போலீசார் சாப்பிட செல்வார்கள். குண்டு வெடிப்பு நடந்தபோது அங்கு போலீசார் யாரும் இல்லை. இதனால் போலீசார் தாக்குதலில் இருந்து தப்பி விட்டனர்.
பட்டனியில் கார்கள் நிறுத்தும் இடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். மற்ற இடங்களில் நடந்த தாக்குதலில் மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தொடர் குண்டு வெடிப்பு பற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், “இந்த குண்டுகள் அனைத்தும் மிகச்சிறிய டைம்பாம் ஆகும். கைக்கெடிகாரத்தில் அவற்றை வைத்து அதிகாலை 1 மணி அளவில் ஒரே நேரத்தில் வெடிக்க வைத்தனர்” என்று தெரிவித்தார்.
துணை பிரதமர் சிட்சாய் அந்த பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளயிருக்கிறார். எனவே அங்கு பதட்டத்தை ஏற்படுத்துவதற்காக குண்டு வெடிப்பை நடத்தி இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.
இதே போன்று மேலும் குண்டு வெடிப்பு நடைபெறலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். அண்டை நாடுகளில் இருந்து சுமார் 200 குண்டுகள் வரை கடத்தி வரப்பட்டுள்ளன என்றும் அந்நாட்டு உளவு துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே தாய்லாந்து நாடு முழுவதும் ராணுவத்தினரும்,போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.