தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரிப்பு
இலங்கையில் போர் மேகம் சூழ்ந்து இருப்பதால், தமிழ்நாட்டுக்கு தப்பி வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராமேசுவரத்துக்கு இதுவரை வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் நேரடியாகவோ அல்லது அகதிகள் போர்வையிலோ தமிழகத்திற்குள் ஊடுருவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி முழுவதும் எப்போதும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 22 போலீஸ் சோதனை சாவடிகள் மற்றும் 14 கடலோர சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் உஷார் நிலையில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லா வாகனங்களும் துருவி துருவி சோதனையிடப்பட்டு வருகின்றன.
பதட்டநிலை காரணமாக கடலோர பகுதியில் புதிதாக 9 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அன்னியர் ஊடுருவலை தடுக்க கடலோர பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையினர், கடலோர காவல்படையினர் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர். ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து கடற்கரையை கண்காணித்து வருகின்றனர். கடலோர பாதுகாப்பு போலீசார் மாறு வேடத்தில் கிராம பகுதிகளில் தங்கியிருந்து வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணித்து வருகிறார்கள்.