யாழ். தட்டாதெருச் சந்தியில் இராணுவ வாகனம் மோதி இளம் பெண் நேற்று சாவு!
யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இராணுவ வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளம் குடும்பப் பெண் பஸ் சில்லில் நசியுண்டு உயிரிழந்தார். கணவன் படுகாயமடைந்தார்.
இராணுவ வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். யாழ். தட்டாதெருச் சந்தியில் நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
இராச வீதி, கோப்பாயைச் சேர்ந்த திருமதி சதீஸ்குமார் கீர்த்தனா (வயது 20) என்ற இளம் குடும்பப் பெண்ணே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
இவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு கே.கே.எஸ். வீதி வழியாக பயணித்த இராணுவ பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தட்டாதெருச் சந்தியில் வைத்து மோதித் தள்ளியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற பெண் வீதியில் விழுந்தார். அவர் மீது பஸ் சில்லு ஏறியதில் அதில் நசியுண்டு அவர் உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்குள்ளான பஸ்ஸையும் அவ்விடத்திலிருந்து எடுத்துச்செல்ல அனுமதித்தனர் என்று கூறப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating