இத்தாலி படகு விபத்தில் சாவு, 300 ஆக உயர்வு!!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து பிழைப்பு தேடி 500–க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு படகில் வந்தனர். இந்த படகு இத்தாலி நாட்டில் துனிசியா– சிசிலி தீவு இடையே லாம்பிதுசா என்ற தீவு அருகே வந்தபோது படகில் தீ பிடித்தது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென படகு முழுவதும் பரவியது. பின்னர் அந்த படகு கடலில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் இத்தாலி கடலோர காவல் படையினரும், போலீசாரும் அவர்களை மீட்க மற்றொரு படகில் விரைந்தனர்.
இருந்தும் இந்த கோர விபத்தில் 90 பேர் பலியாகினர். அவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 கர்ப்பிணி பெண்கள் அடங்குவர் என இத்தாலி உள்துறை மந்திரி ஏஞ்சலினோ அல்பானோ தெரிவித்தார்.
இதற்கிடையே எரிந்த படகின் இடிபாடுகளில் சிக்கியும், தண்ணீரில் மூழ்கிய நிலையிலும் மேலும் 40 உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் மேலும் பல உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.
எனவே, இதுவரை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. இதை மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் சிக்கிய 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணியில் கடலோர காவல் படையினருடன் உள்ளூர் மீனவர்களும் ஈடுபட்டனர். இவர்கள் அதிகாலையில் மீன் பிடிக்க சென்றபோது விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்கள் தங்களை காப்பாற்றும்படி சைகை கொடுத்தனர். அதை தொடர்ந்து மீனவர்கள் விரைந்து சென்று இவர்களை மீட்டனர்.
விபத்தில் சிக்கிய படகில் எரித்ரியா, சோமாலியா நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர். இவர்கள் லிபியாவின் மிஸ்ரதா துறைமுகத்தில் இருந்து படகில் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் பிழைப்பு தேடி வந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்று ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் வந்தவர்களில் சுமார் 17 ஆயிரம் பேர் விபத்துக்குள்ளாகி இறந்துள்ளனர்.
Average Rating