சர்ச்சையிலும் ஒரு அபார சாதனை: ‘தி டாவின்சி கோட்’ படத்தின் வசூல் ரூ.2,890 கோடி
சர்ச்சைக்குரிய ‘தி டாவின்சி கோட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.2,890 கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும், எனவே இந்தியாவில் திரையிடக்கூடாது என்றும் ‘தி டாவின்சி கோட்’ படத்துக்கு பலத்த எதிர்ப்பு வெளியானது. இதையடுத்து இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இப்படத்தை திரையிடக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.
இதேபோல் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலும் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியா, பாக் மற்றும் சீனா தவிர்த்து மற்ற உலக நாடுகளில் ரிலீசான இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இப்படம் இதுவரை ரூ.850 கோடியை வசூலித்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும் இப்படம் பரபரப்பாக ஓடி இதுவரை ரூ.2,038 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் அமெரிக்கா தவிர்த்து இதர உலக நாடுகளில் இவ்வளவு பெரிய வசூலை பெற்றுத் தந்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்த அபார வெற்றியைத் தொடர்ந்து எழுத்தாளர் டான் பிரவுனின் மற்றொரு நாவலான ‘ தி ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்’ என்ற நாவலின் திரைப்பட உரிமையையும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. ஏனெனில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் படமாக்கியுள்ள தி டாவின்சி கோட் படத்தின் கதை டான் பிரவுன் எழுதிய அதே பெயர் கொண்ட நாவலின் தழுவல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.