இராணுவத் தளபதியின் புகைப்படத்துடன் நடத்தப்பட்டு வந்த இரு விபசார விடுதிகள்!
கொழும்பு புறநகர் கல்கிஸை கடற்கரை விடுதியொன்றில் சூட்சுமமான முறையில் நடத்திவரப்பட்ட இரண்டு விபசார விடுதிகளை ஒருங்கிணைந்த குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டதுடன், 4 பெண்களையும் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பிடியாணைக்கு அமைய ஒருங்கிணைந்த குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கணேசநாதன் தலைமையிலான குழுவினர் இச் சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது 25 மற்றும் 28 வயதிற்கு இடைப்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் வத்தளை , நிட்டம்புவ, மொரட்டுவ மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களென விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் இவ்விரு விபசார விடுதிகளும் சுற்றுலா விடுதியென்ற பெயரில் நடத்தி வரப்பட்டுள்ளதுடன், இவ் விடுதிகளில் இராணுவத் தளபதியின் புகைப்படமும் மாட்டப்பட்டிருந்ததாக தெரிய வருகின்றது.
இவ்விரு விபசார விடுதிகளிலும் முன்னெச்சரிக்கையாக நவீன ரக கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமையினால் அதிகாரிகள் சுற்றிவளைப்பதை அறிந்துக் கொண்டு சிலர் தப்பித்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
விபசார விடுதியின் முகாமையாளரான இராணுவ அதிகாரியும் தப்பித்துச் சென்றுள்ளதால் அவரைத் தேடி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டுள்ள நான்கு பெண்களும் விசாரணைக்காக கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating