போராளிகளின் தியாகங்களாலேயே சர்வதேச மயமானது எமது பிரச்சினை அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்கிறார் சுரேஷ்
போராளிகளினதும், மக்களினதும் தியாகங்களாலேயே எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு இராஜதந்திரப் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் ஆயுதப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள், தமிழ் மக்களின் விடுதலையைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ரில்கோ விடுதியில் நேற்று சனிக்கிழமை காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
குட்டிமணி அஹிம்சாவாதியல்ல. அவர் ஒரு ஆயுதப் போராளி. அவரை 1982 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர் அ.அமிர்தலிங்கம், களமிறக்கியிருந்தார். இதனை இன்றைய தலைவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய தேசிய விடுதலை இயக்கங்கள் கூட்டமைப்பினுள் இன்று இருக்கின்றன. தமிழ் மக்களின் விடுதலைக்காக அவர்கள் ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களை தியாகம் செய்தார்கள்.
தந்தை செல்வா காலத்திலோ ஏன், பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்திலோ எம்மைக் கண்டு கொள்ளாத சர்வதேசம் இன்று லட்சோபலட்சம் போரா ளிகளும் மக்களும் மடிந்த பின்னர்தான் கண்டுகொண்டுள்ளார்கள்.
எனவே நாங்கள் மேடைக்கு மேடை முழங்கிய இராஜதந்திரப் போராட்டத்தின் காரணகர்த்தாக்கள் அவர்களே.
தேர்தலின் போது பிரபாகரன் மாவீரன் என்று சொன்னவர்கள் இன்று தமது தேர்தல் பேச்சுக்கும் தற்போதைய பேச்சுக்கும் இடையே இடைவெளியை தோற்றுவித்துள்ளனர் – என்றார்.
Average Rating