்புலிகளின் விமான தளம் குண்டு வீசி அழிப்பு: ராணுவம் அதிரடி தாக்குதல்
இலங்கை அனுராதாபுரத்தில் கண்ணி வெடி தாக்குதல் மூலம் 64 பஸ் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து ராணுவம்- புலிகள் இடையே மீண்டும் பயங்கர மோதல் வெடித்து உள்ளது. இலங்கை ராணுவம் புலிகள் வசிக்கும் பகுதியில் விமானம் மூலம் குண்டு வீசியும், தரை வழி மூலம் தாக்குதல் நடத்தியும் வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புலிகளும் நேற்று தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள். மன்னார் மாவட்டம் லேகாவை என்ற இடத்தில் விடுதலைப்புலிகள் 11 படகுகளில் சென்று போலீஸ் நிலையம் மீது குண்டு வீசினார்கள். அவர்கள் மீது உடனே இலங்கை ராணுவம் முப்படை தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்கும் நடந்த சண்டையில் இரு தரப்பிலும் 51 பேர் பலியானார்கள். விடுதலைப்புலிகளில் 8 படகுகளும், ராணுவத்தின் 3 படகுகளும் மூழ்கடிக்கப்பட்டன.
இலங்கை விமானப்படையை எதிர்கொள்ளும் வகையில் புலிகளும், விமானப்படை அமைத்து உள்ளனர். சில குட்டி விமானங்கள் அவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக வன்னி காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகள் விமான தளம் ஒன்று அமைத்து இருந்தனர். இதை குறி வைத்து ராணுவ விமானங்கள் சரமாரி குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் அந்த விமான நிலையம் பலத்த சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்து வெளிவரும் `டெய்லி மிரர்’ பத்திரிகையில் இது பற்றி விரிவான செய்தி வெளியிட்டுள்ளது. அதில் விமான தளம் பயன்படுத்தப்பட முடியாத அளவுக்கு சேதம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடவில்லை.