எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறி இராணுவ முகாமில் புகுந்து விபத்து
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலனறுவைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு பகுதியை நோக்கி எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த எல்ப் ரக வாகனம் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கும்புறுமூலை சந்தியில் வைத்து அதன்; டயர் ஒன்று காற்றுப் போனதில் வாகனம் வீதியை விட்டுவிலகி அருகிலுள்ள இராணுவ முகாமுக்குள் புகுந்ததில் இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் மீராவோடை ஆலிம் வீதியைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான மீராமுகைதீன் அன்வர் சாதாத் (33) என்பவரே உயிர் இழந்தவராவார். காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன் இவ்விபத்துத் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating