அநாதரவாக கிடந்த தங்க நகைகளை விற்பதற்கு சென்ற காதலர்கள் கைது!!
பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் உரிமையாளர் இன்றிக் கிடந்த 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை எடுத்து விற்பனை செய்யச் சென்ற கேகாலை கலிகமுவையைச் சேர்ந்த ஒருவரையும் அவரது காதலியையும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து கடந்த 5 ஆம் திகதி மாலை கேகாலையில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
இந்த இருவரும் கைது செய்யப்பட்ட போது ஒரு தங்க வளையல் அடகு வைக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய அனைத்து தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது.
பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள ஹோட்டலில் கடமையாற்றும் இந்த சந்தேக நபர் பார்சலில் தங்க நகைகள் இருப்பதைத் தெரிந்து கொண்டு கலிகமுவயிலுள்ள தமது வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கு தமது காதலியையும் அழைத்துக் கொண்டு கேகாலையிலுள்ள நகை அடகு பிடிக்கும் நிலையத்துக்கு நகைகளை ஈடு வைப்பதற்காகச் சென்றுள்ளார்.
அடகு பிடிக்கும் நிலையத்தில் இவர்கள் இருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர் தமது காதலியிடம் நண்பரொருவர் அடகு வைப்பதற்காக தம்மிடம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நகைகளுக்கு உரிமையாளர் வெலிகட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் சந்தேக நபர் ஹோட்டலுக்கு கடமைக்கு வராததால் சந்தேகமுற்று அத்தகவலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கலிகமுவ பல்லபான பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான சந்தேக நபரையும் மாவனெல்லையைச் சேர்ந்த 18 வயதான இவரது காதலியையும் கேகாலை பொலிஸார் வெலிகட பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating