தமிழமுதன் கடத்தலில் புலனாய்வு பிரிவுக்கு தொடர்பென தந்தை குற்றச்சாட்டு
வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் கந்தவனம் சூரியகுமாரனின் 22 வயது மகன் தமிழமுதன் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழமுதன், வழமைபோல, பருத்தித்துறை இன்பருட்டியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் இரவில் தங்குவற்காகச் சென்றபின்னர் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு வழமைபோல சகோதரியின் வீட்டில் படுப்பதற்காக தனது மகன் சென்றதாகவும், மறுநாள் வியாழக்கிழமை காலை 6.45 மணியளவில் தனது கைத்தொலைபேசிக்குத் தனது மகன் அனுப்பியிருந்த குறுந்தகவல் ஒன்றில் தான் நான்கு பேர் கொண்ட குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பியிருந்ததாகவும் சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
கடத்திச் சென்ற நான்குபேரில் ஒருவர் தமிழ் பேசியதாகவும், அவரே தன்னுடைய கைத்தொலைபேசியைக் கொடுத்து வீட்டிற்குக் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்துமாறு கூறியிருந்ததாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் விபரித்துள்ளார்.
இந்த குறுந்தகவலை ஆதாரமாகக் காட்டி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்திருப்பதாகவும், கடந்த 2009 ஆம் ஆண்டு தனது மற்றுமொரு மகன் காணாமல் போயிருப்பதாகவும் சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
தனது மகன் கடத்தப்படுவதற்கு முதல் நாள், புலனாய்வாளர்கள் தமது ஊரில் வந்து தனது மகனைப் பெயர் குறிப்பிட்டு தெரிவித்து அவர் எங்கு இருக்கின்றார், என்ன செய்கின்றார் என்பது பற்றி விசாரித்துச் சென்றதாக ஊர்வாசிகள் தெரிவித்திருப்பதனால், இந்தக் கடத்தலுக்கும் புலனாய்வாளர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பருத்தித்துறைப் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating