ஈரானிய மகளிர் கால்பந்தாட்ட அணியில், ஆண்களாக இனங்காணப்பட்ட நால்வருக்குத் தடை;
ஈரானின் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியில் அங்கம் வகித்த நால்வருக்கு அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனம் தடை விதித்துள்ளது.
அத்துடன் ஈரானிய மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகள் அனைவரையும் பாலின சோதனைக்குள்ளாகுமாறும் அச்சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
ஈரானிய மகளிர் கால்பந்தாட்ட அணி அங்கத்தவர்களிடையே அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது அவர்களில் நால்வர் ஆண்கள் என கண்டறியப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நால்வரும் பால் மாற்று சிகிச்சை செய்துகொண்ட ஆண்கள் அல்லது பாலின உறுப்பு வளர்ச்சி தொடர்பான குறைபாடுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் ஈரானிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் முக்கிய நட்சத்திரங்களாக விளங்கியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் பால் மாற்றுச் சத்திரசிகிச்சை மூலம் பெண்களாக மாறினால் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பால் மாற்று சத்திரசிகிச்சைகளின் மூலம் தங்களது பாலினத்தை மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்த முடியுமானால் அவர்களால் மீண்டும் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் விளையாட முடியும்’ என ஈரான் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வைத்திய குழுவின் தலைவர் அஹ்மட் ஹஷிமியன் தெரிவித்துள்ளார்.
ஈரானில் பால் மாற்று சிகிச்சை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஈரானிய மகளிர் அணியில் ஏனைய அங்கத்தவர்கள் பெண்கள் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக பாலின பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். அணியின் அங்கத்தவர்களிடையே பயிற்சிகளின்போது பாலின சோதனைகள் நடத்தப்படவுள்ளது.
தற்போது ஈரானிய மகளிர் கால்பந்தாட்ட கழகங்களுக்கு வீராங்கனைகள் இணைக்கப்படுவதற்கு முன்னர் அவர்களிடையே பாலின சோதனை நடத்தப்பட்டு அவர்கள் உண்மையில் பெண்கள் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கழகங்களில் இணைத்துகொள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில் பாலின சோதனையில் சித்தியடையாத 7 வீராங்கனைகளின் கழக ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Average Rating