+1 மாணவனை காரை ஓட்டவிட்டு அழகு பார்த்த பெற்றோர்: விபத்தில் குடும்பமே பலி
திருப்பூர்: திருப்பூரில் ப்ளஸ் 1 மாணவனை காரை ஓட்ட பெற்றோர் அனுமதித்துள்ளனர். அவர் எதிரே பேருந்து வந்ததை பார்த்து பயந்து அதன் மீது காரை மோதியதில் மாணவர் மற்றும் அவரது பெற்றோர் பலியாகினர்.
திருப்பூர் காந்தி நகர் ஆஷர் மில் 2வது தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி(49). திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அவரது மனைவி சிவகாமி(40). அவர்களுக்கு செல்வவேல்(16) என்ற ஒரே பிள்ளை தான்.
செல்வவேல் தாராபுரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ப்ளஸ் 1 படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்த மகனை வார இறுதி நாட்களை வீட்டில் கழிக்க அவரை அழைத்து வர துரைசாமி தனது மனைவியுடன் காரில் சென்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் தாராபுரத்திற்கு சென்று மகனை அழைத்துக் கொண்டு திருப்பூர் திரும்பினார்கள்.
வரும் வழியில் கொடுவாய் என்ற இடத்தை தாண்டியபோது போக்குவரத்து குறைவாக உள்ள சாலை வந்தபோது மகனை காரை ஓட்டுமாறு துரைசாமியும், சிவகாமியும் கூறியுள்ளனர். மகன் கார் ஓட்டும் அழகை பார்த்து ரசித்துள்ளனர்.
அப்போது எதிரில் தாராபுரம் நோக்கி வந்த பேருந்தை பார்த்த செல்வவேல் நிலைதடுமாறி காரை பேருந்து மீது மோதினார்.
இதில் செல்வவேல் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating