மழை வேண்டி அம்மனுக்கு நீரால் அபிஷேகம்
மலையகத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியுள்ளதால் நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட கூடும் என்பதுடன் மலையகத்தின் பிரதான தொழிற்துறையான தேயிலை துறையும் பாதிப்படைய கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே உடனடியாக மழையை பெற்றுக் கொடுக்கும் படி இறைவனிடம் கோரும் நிகழ்வாக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் அம்மன் கோயில்களில் குடத்து நீர் ஊற்றும் நிகழ்வுகள் தற்போது பரவலாக நடைபெற்று வருகின்றது.
ஆறு அல்லது நீரூற்றுக்களில் நீரை பெற்று அதை ஊர்வலமாக குலவை பாடலுடன் குடங்களில் சுமந்து வந்து அம்மனுக்கு ஊற்றுவதன் மூலம் மழை பெய்யும் என்பது பரம்பரையான ஐதீகம். இந்த செயற்பாட்டினை பெரும் வரட்சிக் காலங்களில் மலையக பகுதிகளில் காணமுடியும்.
தற்போது நிலவி வரும் கடுமையான வரட்சியினால் தமது ஜீவனோபாயம் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக மழை வேண்டியே இந்த பெண்கள் இவ்வாறு நீரை சுமந்து வந்து அம்மனை குளிர்விக்கின்றனர்.
பொகவந்தலாவை எல்படை தோட்டத்தில் நேற்று மாலை இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வு காரணமாக தமக்கு விரைவில் மழை கிடைக்கும் என இப்பெண்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Average Rating