திருமணம் முடிந்து 30 நிமிடங்களில் குழந்தை பிறப்பு: அமெரிக்காவில் சம்பவம்
குழந்தை பிறப்பதற்கு 30 நிமிடங்களுக்குப் முன்னர் பிரசவ வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தனது காதலியை மருத்துவமனை படுக்கையில் வைத்து காதலர் திருமணம் செய்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தத் திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பிரசவ வலிக்கு உள்ளான நிலையில் போர்ட் வோர்க் நகரிலுள்ள நோர்த் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது காதலியான பிரன்ட்டி வெட்ஸெலுக்கு திடீர் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முகமாக மேற்படி திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பொறியியலாளராக பணியாற்றும் அண்டர்ஸனும் அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் பணியாற்றும் பிரண்டியும் ஒருவரையொருவர் சந்தித்து காதல் கொண்டு திருமணம் செய்யாது இணைந்து வாழ்ந்தமை காரணமாக பிரண்டி கர்ப்பமடைந்தார்.
காதலி பிரசவ வலிக்குள்ளாகி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கணத்தில் தமது குழந்தை பிறந்து முதன்முதலாக உலகைப் பார்க்கும் போது தாம் சட்டபூர்வமான தம்பதியாக வேண்டும் என்ற ஆர்வம் அன்டர்ஸனுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து அவசர அவசரமாக வெளியேறிய அவர் உடனடியாக திருமண மோதிரத்தை வாங்கிக் கொண்டு திரும்பினார்.
அதன் பின் மத போதகரான பிரண்டியின் தந்தை முன்னிலையில் அவர் பிரண்டியை திருமணம் செய்தார்.
மேற்படி திருமணம் செய்து அரை மணித்தியாலத்தில் பிரண்டி பெண் குழந்தையொன்றை பிரசவித்தார். பிறந்த குழந்தைக்கு ஜெனெல்லி என பெயர் சூட்டப்பட்டது.
அன்டர்ஸனின் வேண்டுகோளின் பேரில் மருத்துவமனை அறையை மருத்துவ தாதிகள் எளிமையாக அலங்கரித்திருந்தனர்.
Average Rating