கொழும்பில் இருந்து பளை வரை விசேட ரயில் சேவை
கொழும்பில் இருந்து பளை வரை இன்று முதல் விசேட ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குளிரூட்டப்பட்ட விசேட சொகுசு ரயிலொன்றே சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் சிசிர குமார தெரிவித்துள்ளார்.
இந்த செகுசு ரயில் சேவைக்காக கொழும்பு கோட்டையிலிருந்து பளை வரை ஆயிரத்து 400 ரூபா கட்டணமாக அறவிடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ரயிலுக்கான பயணச்சீட்டை வடபகுதி ரயில் மார்க்கத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் முன்பதிவு செய்து, பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
புதிதாக திறந்து வைக்கப்பட்ட கொழும்பு முதல் பளை வரையான ரயில் மார்க்கத்தில் விசேட சொகுசு ரயில் சேவை நாளாந்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் கூறுகின்றார்.
பிற்பகல் 2.45க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பளை நோக்கி இந்த ரயில் புறப்படவுள்ளதுடன், பளையில் இருந்து மாலை 6.50க்கு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குளிரூட்டப்பட்ட விசேட சொகுசு ரயில் 6 மணித்தியாலயத்திற்குள் பயண முடிவிடத்தை சென்றடையும் என ரயில்வே வணிக அத்தியட்சகர் சிசிர குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த நான்காம் திகதி கிளிநொச்சியிலிருந்து பளை வரையிலான ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடபகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Average Rating