யாழ். சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்..
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொட்டடியை சேர்ந்த 14 வயது சிறுமியை அதே இடத்தை சேர்ந்த 19வயதுடைய இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் உறவினரால் கடந்த 21ஆம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதன்படி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர் சிறுமியை காதலிப்பதாக பொய் கூறியே துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்தது.
அத்துடன் குறித்த துஷ்பிரயோகம் கடந்த 3மாதங்களுக்கு முன்பாகவே இடம்பெற்றுள்ளதாகவும் அதனால் கற்பமாகியிருந்த சிறுமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் குறித்த நபர் தலைமறைவாகி இருந்தமையால் கைது செய்ய முடியவில்லை.
இருப்பினும் அவர் கடந்த தினங்களில் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating