இலங்கை ஐ.நா.வில் பட்டியலிட்ட 16 வெளிநாட்டு அமைப்புகளும், 424 தமிழர்களும் பற்றிய விளக்கம்!
வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழ் அமைப்புகள், மற்றும் 424 தமிழர்களின் பெயர் விபரங்கள் அரசு ஆணையில் வெளியானது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார், இலங்கை ராணுவப் செய்தித் தொடர்பாளர், பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கொடுத்த விளக்கம்:
ஐ.நா. பாதுகாப்பு சபையில் 2011-ம் ஆண்டு செப்டெம்பர் தாக்குதலை தொடர்ந்து 1267 மற்றும், 1373-ம் இலக்கம் கொண்ட இரு சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒன்று தலிபான் மற்றும் அல்-காய்தா அமைப்புக்களை தடை செய்வது, மற்றும் அந்த பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புக்களை இனம்கண்டு அவற்றுக்கு எதிராக சர்வதேச அளவில் செயல்படுவது.
இரண்டாவது, வெவ்வேறு நாடுகளில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள், மற்றும் நபர்களை பட்டியலிட்டு, சர்வதேச அளவில் நடவடிக்கை எடுப்பது. இதுதான், 1373-ம் இலக்கம் கொண்ட சட்டமூலம்.
இந்த இரு சட்டமூலங்கள் தொடர்பாகவும், ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டிலும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு அவை அமல் செய்யப்படுகிறது.
1267-ம் இலக்க சட்டமூலம் தொடர்பாக இலங்கை பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதரன (உளவுப்பிரிவின் தலைவர்) உள்ளார்.
1373-ம் இலக்க சட்டமூலம் தொடர்பாக இலங்கை பிரதிநிதியாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே உள்ளார்.
இந்த 1373-ம் சட்டமூலத்துக்கு அமையவே, பாதுகாப்பு செயலாளரினால் 16 அமைப்புக்களும் 424 தனி நபர்களும் பயங்கரவாதத்துடன் தொடர்பானவர்கள் என ஐ.நா.வில், பட்டியலிடப்பட்டுள்ளனர்.
பட்டியலில் உள்ள யாராவது, தாம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றால், ஐ.நா.வின் இலங்கை பிரதிநிதிகளை அணுகுவதன் மூலம், ஆதாரங்களை முன்வைத்து, தாம் நிரபராதிகள் என நிரூபித்து, பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்கிக் கொள்ள முடியும்.
எனினும் இலங்கை தடை செய்த 16 வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களும், 424 தனி நபர்களிலும் எவரும் இதுவரை தம்மை விடுவித்துக் கொள்ள முன்வரவில்லை” என்றார்.
Average Rating