வட மாகாணசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: ஈ.பி.டி.பி தவராசா வெளிநடப்பு
வட மாகாணசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஷ்டிக்கும் முகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்கு சமூகமளித்திருந்தனர்.
இந்நிலையில் அமர்வில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்ற போது எதிர்க்கட்சித் தலைவரான ஈ.பி.டி.பியின் எஸ்.தவராசா சபையில் வெளிநடப்பு செய்தார்.
வட மாகாணசபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இதன்போதே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர் ஹயீபு முகமது றையீஸ், முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதுடன் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அஞ்சலியில் கலந்துகொள்ளாது தத்தம் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.
மேலும் சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவைக்கு தாமதமாக சமூகமளித்ததாலும், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சபைக்கு சமூகமளிக்காததாலும் அஞ்சலி நிகழ்வில் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.
Average Rating