இந்தோனேஷியாவில் புயல் மழைக்கு பலி 460 ஆக உயர்வு
இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுலாவெகி தீவுதான் பலத்த மழையிலும் புயல் காற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன. ஏராளமான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. கடலில் தொடர்ந்து கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடல்நீர் ஊருக்குள் புகுந்து ஏராளமான வீடுகள் மூழ்கி விட்டன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டும் 200 பேர் பலியாகி விட்டனர். இன்னும் 120 பேரை காணவில்லை. பல நாட்களாக அவர்களை தேடியும் காணவில்லை. காட்டாற்று வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டு இருந்திருக்கலாம் என தெரிகிறது.
மேற்கு சுமத்ரா தீவின் பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலில் சென்ற படகு இன்னும் திரும்பவில்லை. அந்த படகில் 2 அமெரிக்கர்கள் உள்பட 108 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர். அந்த படகு கடல் கொந்தளிப்பில் சிக்கியது. ராட்சத அலைகள் அந்த படகை மூழ்கடித்து விட்டது. பயணிகளும் சிப்பந்திகளும் மூழ்கி பலியாகி விட்டனர்.