மரண தண்டனை தீர்ப்பு பெற்ற சூடானியப் பெண்ணுக்கு சிறையில் பிரசவம்..
இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் பின்பற்றப்படும் சூடான் நாட்டில் சமீபத்தில் மரியம் எஹ்யா இப்ராஹீம் என்ற 27 வயது நிரம்பிய பெண் கிறிஸ்துவ மதத்தைத் தழுவியதற்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
சமய நிந்தனையில் ஈடுபட்டதாக கூறிய நீதிபதி அவரை மீண்டும் இஸ்லாம் மதத்திற்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். அதற்கு உடன்பட மறுத்ததால் 100 கசையடிகளுடன் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு உலகம் முழுவதும் விமர்சனத்திற்கும் உள்ளானது.
இந்த சம்பவத்தின்போது எட்டு மாத நிறைகர்ப்பிணியாக இருந்த மரியம் கர்த்தூம் சிறையில் அடைக்கப்பட்டார். தனது 20 மாத ஆண்குழந்தையுடன் அங்கு இருந்த அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தையொன்று பிறந்துள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் இன்று தெரிவித்தனர்.
ஆனால் அவரது கணவர் சிறையில் இருப்பதற்கு அனுமதி தரப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். மரியத்தின் கணவர் டேனியல் வனி அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்றும், சக்கர நாற்காலியில் வாழும் அவர் தன்னுடைய தேவைகளுக்கு மனைவியையே சார்ந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மரியத்தின் தண்டனையைக் குறைக்கக்கோரி சூடான் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் இந்த முறையீடு அவரது தண்டனையைக் குறைக்கக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Average Rating