ஆஸியில் இலங்கையர் தீக்குளிப்பு; குடும்பத்தார்க்கு விசா மறுப்பு
அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழரான லியோர்சின் சீமான்பிள்ளை (வயது – 29), தனக்கு நிரந்தர அடைக்கலம் கேட்டிருந்தார்.
ஆனால், அவருக்கு தற்காலிக விசா வழங்கிய அவுஸ்திரேலியா அரசு, வேலை செய்ய உரிமம் வழங்கியது.
இதற்கிடையே தன்னை இலங்கைக்கு நாடு கடத்திவிடுவார்களோ என்ற பயத்தில் இருந்த சீமான்பிள்ளை கடந்த சில தினங்களுக்கு முன் தீக்குளித்து இறந்தார்.
அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக விசா கேட்டு இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்தனர். ஆனால், அவுஸ்திரேலிய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.
குடும்பத்தினர் யாரும் இல்லாமலேயே அதிகாரிகள் முன்னிலையில், நாளை கீலாகில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவுக்கோ அல்லது இலங்கைக்கோ உடலை அனுப்ப விரும்புவதாக அவுஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், இறுதிச்சடங்கை குறிவைத்து தாக்குதல் நடக்கலாம் என்ற பயத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் உடலை கொண்டு வர மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating